தமிழகத்தில் போலியில்லாதது என்ன கிடைக்கும்?
குறிச்சி : கோவை அருகே மதுக்கரையை அடுத்த ஆட்டோ நகரில் செயல்பட்டு வந்த, போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுக்கரை – நீலம்பூர் பை-பாஸ் ரோடு துவக்கத்தில் ஆட்டோ நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு, சந்தேகத்திற்குரிய வீட்டை சோதனையிட்டனர். ஆய்வில், போலி மதுபானம் தயாரிப்பது தெரிந்தது. இது தொடர்பாக, கேரள மாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த ராமதாஸ், திருச்சூரைச் சேர்ந்த ஷீமோன் பெரஸ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் கைது செய்யப்பட்டனர். இவ்வீட்டில் குடியேற உதவிய மதுக்கரையைச் சேர்ந்த புரோக்கர் முகமதுவும் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த 1,632 குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த மெக்டவல், கோல்கொண்டா பிராண்ட் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.
போலி மதுபான தொழிற்சாலையை பார்வையிட்ட எஸ்.பி., கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள தோட்டங்களில் எரிசாராயம் பதுக்கப்பட்டு, போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. பிலோமினா என்பவருக்கு சொந்தமான இவ்வீடு சோதனையிடப்பட்டது. போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான நசீர் உட்பட நான்கு பேரை தேடி வருகிறோம். இச்சம்பவத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடத்தப்படும். இது போன்ற போலி மதுபானங்களில், எரிசாராயத்தை சேர்க்கின்றனர்; அளவு கூடும் பட்சத்தில் கண் பார்வை பறிபோதல் போன்றவை ஏற்படும். பொள்ளாச்சியில் எரிசாராயம் கடத்தி வந்த டெம்போ டிராவலர் வேன் பிடிபட்டுள்ளது. 1,350 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எரிசாராயம், மணல், ரேஷன் அரிசி கடத்த உதவும் புரோக்கர்களும் கைது செய்யப்படுவர். சந்தேகப்படும் வகையில் நடமாடுவோர் மற்றும் அவர்கள் செயல்பாடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கண்ணன் தெரிவித்தார்.