சென்னை:”அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பையும் இலவசமாக வழங்க முன்வர வேண்டும்,” என, சட்டசபை பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த பொது விவாதம்: ஜி.கே.மணி – பா.ம.க: பென்னாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியின் மிகப்பெரிய கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியை எதிர்த்து பா.ம.க., தனித்து போட்டியிட்டு 41 ஆயிரத்து 285 ஓட்டுகளை பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு திட்டங்கள் எந்த அளவு நிறைவேற்றப்பட்டன என்ற அறிக்கை, கடந்த ஆண்டு மக்களை போய்ச்சேர்ந்த திட்டங்களால் எந்த அளவு விளைவு, தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட வாரியாக குடிசைகளை கணக்கெடுத்து, முன்னுரிமை கொடுத்து, எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கழிவறைகள் அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளில் கட்டாயம் கழிவறை வசதியும் செய்ய வேண்டும். கிராமப்புறங்களிலும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாயும், கிணறு வைத்திருக்கும் குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும்.இயற்கை இடர்பாடு நிதி உருவாக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இடைக்கால தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய அளவில் விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நிதியமைச்சர் அன்பழகன்: தமிழகத்தில் தான் விவசாயிகளின் 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ஜி.கே.மணி: சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதையை, தமிழகத்திற்கு நுழைய விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரை செய்யும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் எதுவும் இல்லை என்ற நிலை 2012ம் ஆண்டிற்குள் ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் குட்டி ஜப்பான் உருவாகவுள்ளது என 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விவசாய நிலத்தை ஏன் அடிமாட்டு விலைக்கு வாங்கித்தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களாகவே வாங்கட்டும். விலைவாசி உயர்வு குறித்து துணை முதல்வர் ஸ்டாலின், டில்லியில் பேசியுள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, விவசாயிகள் ஏற்றுக் கொண்டால் தான் விவசாய நிலம் பன்னாட்டு நிறுவனத்திற்காக வாங்கப்படுகிறது. ‘சிப்காட்’டில், தவிர்க்க முடியாத நிலையில் அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலாளிகளுக்காக அரசு விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கவில்லை.
ஜி.கே.மணி: கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு, கோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை, மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கோர்ட் உத்தரவால் தான், கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. முதல் தலைமுறையாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், கிராமப்புற முதல்தலைமுறை மாணவர்கள் பயனடைவர்.
ஜி.கே.மணி: அரசு இலவச கலர், ‘டிவி’யை, 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்கி வழங்கி வருகிறது. கேபிள், ‘டிவி’க்கு தனித்தொகை செலுத்த வேண்டியுள்ளது. கிராமங்களில் 100 ரூபாய், நடுத்தர நகரங்களில் 120 ரூபாய், பெரிய நகரங்களில் 150 ரூபாய் என கேபிள், ‘டிவி’ கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இதனால், ஏழைகள் ஆண்டிற்கு 1,200 முதல் 1,800 ரூபாய் செலவழிப்பது, சிரமமாக உள்ளது. கேபிள், ‘டிவி’ இணைப்பையும் அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி கோரினார்.